::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, January 21, 2010

லட்சுமாங்குடியில் வர்த்தக சங்க கூட்டம்

கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடியில் வர்த்தக சங்க கூட்டம் நடந்தது. தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணன், பொருளாளர் கண்ணையன், துணைச்செயலாளர் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நகராட்சி துணைத்தலைவர் காதர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக லட்சுமாங்குடி, கூத்தாநல்லூரில் இருந்து பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வர்த்தகர்களுக்கு சிறுதொழில் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் அப்துல்பாரி வரவேற்றார். முன்னாள் தலைவர் நாகூர்கனி நன்றி கூறினார்.

கூத்தாநல்லூர் செய்திகள்.

Wednesday, January 20, 2010

மூன்றாம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

திருவாரூர் மாவட்டத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் மூன்றாம் கட்டப்பணி புதன்கிழமை முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 72,000-த்துக்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்களையும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கும் பொருட்டு இரண்டு கட்டமாக ஏற்கெனவே நடத்தப்பட்ட புகைப்படம் எடுக்கும் பணியில் இதுவரை 2,86,374 குடும்பங்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை 2,11,925 பேருக்கு அடையாள அட்டைகள் வரப்பெற்று, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மேலும் ஏதேனும் தகவல்களை பெற விரும்பினால் 04366-225662 அல்லது 94888 92608 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் புதன்கிழமை முதல் அனைத்து வேலைநாள்களிலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மூன்றாம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விடுபட்டுள்ள அனைத்து குடும்பங்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Monday, January 11, 2010

புதிய குடும்ப அட்டைகளுக்கும் 3 லிட்டர் மண்ணெண்ணெய்

திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி மாதமும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என ஆட்சியர் எம்.​ சந்திரசேகரன் தெரிவித்தார்.​ ​ ​

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு இணைப்பு உள்ளவர்களுக்கு ஆக.​ 2008 முதல் மாதந்தோறும் தொடர்ந்து 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.​ தொடர்ந்து ஜனவரி மாதத்துக்கும் தலா மூன்று லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.​​ ​ ​

எனவே,​​ மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, January 9, 2010

மறவாதீர், நாளை போலியோ சொட்டு மருந்து தினம்!

நாளை தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாளை மற்றும் அடுத்த மாதம் 7 ஆகிய 2 நாட்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

சொட்டு மருந்து வழங்குவதற்காக 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதர நிலையங்கள், சத்து ணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற் கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட தற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கங்கண சூரிய கிரகணம் :​ திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம்

கடலோர மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி தெரிய வாய்ப்புள்ளதாக கருதப்படும்,​​ கங்கண சூரிய கிரகணம் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி 3 இடங்களில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.​ ​ ​ ​

இதுதொடர்பாக அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ராசப்பன்,​​ நீடாமங்கலத்தில் தெரிவித்ததாவது:​ ​ ​ ​ கங்கண சூரிய கிரகணம் வரும் 15ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு நிகழ்கிறது.​ குறிப்பாக,​​ கடலோர மாவட்டங்களில் 90 முதல் 98 சதவீதம் வரை தெரிய வாய்ப்பு உள்ளது.​ ​ ​ கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும்.​ இதை பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் பிரத்யேக கண்ணாடிகளை குறைந்த கட்டணத்தில் கண்ணாடி ஒன்று ரூ.​ 10-க்கும் வழங்கப்படவுள்ளது.

Thursday, January 7, 2010

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மற்றும் பிப்.7ம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது என்று கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்தார்.போலியோ சொட்டு மருந்து வழங்குதல் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசியதாவது:

போலியோ நோயை அடியோடு ஒழிக்கும் வகையில் வரும் 10ம் தேதி, பிப்ரவரி 7ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதன்படி வரும் 10ம் தேதி நடக்கும் முகாமிற்காக மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 324 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியை 109 மேற்பார்வையாளர்கள், மாவட்ட அளவில் 6 மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க உள்ளனர். கூடுதலாக வருவாய் கோட்ட அளவில் 2 கண்காணிப்பாளர்களும், வட்ட அளவில் 7 கண்காணிப்பாளர்களும் இப்பணியில் ஈடுபடுவர்.

அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் சத்துணவு மையங்கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பணிகள் நடக்கும் இடத்திலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு புதிய முயற்சியாக வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்களில் வழங்கப்படும் இந்த மருந்து கூடுதலாக விடுபட்டவர்களுக்கு பஸ்ஸ்டாண்டுகளில் மட்டும் மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை வழங்கப்பட உள்ளது.

இந்த முகாம் வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 348 குழந்தைகள் பயனடைவர். எனவே அனைத்து 5 வயதிற்குட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோய் இல்லாத சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

டி.ஆர்.ஓ. ஜான் லூயிஸ், இணை இயக்குனர் (சுகாதாரம்) கோவிந்தசாமி, துணை இயக்குனர் சகாயமேரி ரீட்டா, ஒன்றியக்குழு தலைவர்கள் பாண்டியன், கமாலுதீன், முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி, மாவட்ட கல்வி அலுவலர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Blog Archive