
நமது கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் குளத்தின் 104 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக மஸ்ஜிதியா தெரு - ஜாவியா தெரு சந்திப்பை ஒட்டிய சாலையில் நடுபகுதியுடன் விரிசல் கண்டு கடந்த 2010 - நவம்பர் மாதம் - 27ம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு குளத்திற்குள் விழுந்துவிட்டது.
இச்சம்பவத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றிய இறைவனுக்கும், சாலையை முடக்கி முன்னேற்பாடுகள் செய்த பெரியப்பள்ளி நிர்வாகத்திற்கும் ஏனைய தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மழைக்காலம் முடிந்த இந்நிலையில் இடிந்த பெரியப்பள்ளிவாயில் குளத்தின் சுற்றுச்சுவரினை மீண்டும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஊகிக்கப்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என முடிவெடுக்கப்பட்டது.
எனினும் இத்தொகையை தமிழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பகிர்ந்து கொண்டு கட்டி முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான சரிபாதி பங்குத்தொகை ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நமது பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தின் சார்பாக திருவாரூா் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்னும் ஓரிரு வாரங்களில் குளத்தின் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விரைவில் வேலைகள் துரிதமாக நடைபெறும் என பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தகவல் - ஜமால். ஷேக் அப்துல் காதர்
செயலாளர், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில்