::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, June 23, 2009

எங்கள் குரல் KEO மூலம் ஓங்கி ஒலிக்க வேண்டுகோள்..!

மதிப்பிற்குரிய KEO நிர்வாகிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நாம் கடல் கடந்து வாழ்ந்தாலும் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு நாம் ஓவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களது பணிகளை செய்து வருகிறோம். எமது நல்முயற்சிகளுக்கு அல்லாஹ் போதுமானவன். அந்த வகையில் தங்களுடைய KEO அமைப்பின் மூலம் தாங்கள் பல கல்வி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பொருட்செலவு மற்றும் மனித உழைப்பு போன்றவற்றை உங்களது அனைவரின் கடின உழைப்பின் மூலம் செலவிடுவது ஊர் மக்கள் எங்களுடைய சார்பில் என்றென்றும் பாராட்டக் கூடிய விசயமாகவே இருக்கின்றது.

எனினும் இதுபோன்ற சமுதாய பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நீங்கள் தயவுகூர்ந்து ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். இதனை நான் பல நேரங்களில் பலரிடம் தனியொரு மனிதனாக சொல்லி சொல்லி, ஒரு கை எழுப்பாத ஓசையாக போனதை எண்ணி வருத்தமடைகிறேன்.

கல்வி... இன்று நமது இஸ்லாமிய சமூகம் பின்தள்ளப்பட்டு பல வேளைகளில் பல இடங்களில் பொய்த்து , குரல் கொடுக்க ஆளில்லாமல் போனதற்கு கல்வியறிவின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்தே பல முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். எனினும் இந்த விசயத்தை மேலோட்டமாக பார்த்து, பொருட்செலவும் செய்து, அகலமாக உழுதுவிட்டு போவதில் பயனில்லை என்றே கருதுகிறேன்.

இன்றைய கால சூழ்நிலை, (மேலை நாட்டுக் கலாச்சாரத்தை அச்சுப்பிழையின்றி வீட்டிற்குள் கொண்டு சேர்க்கும் கலை படைப்பாளிகளாக தங்களை தாங்களே நினைத்துக் கொண்டிருக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மூலம் காப்பியடிக்கப்பட்ட) கலாச்சார பரிணாமம், சமூக கட்டுப்பாட்டில் காட்டப்படுகின்ற அலட்சியம், பெரும்பாலும் நம்மில் அனைவரும் மறந்துவிட்ட தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இப்போதைய தேவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய விசயங்களில் அதிக அக்கறை செலுத்த வேண்டுகிறேன்.

முதலாவது... ஆண்பிள்ளைகளின் கல்வி

இன்று நமதூரில் ஏராளமான பெண்பிள்ளைகள் சாதாரணமாக கல்லூரிகல்வி வரையிலும் செல்லும் வாய்ப்புகளும், ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு அவர்களும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் பட்டங்கள் வரை பெற்று வருகின்றனர். ஆனால் ஆண்பிள்ளைகளின் கல்வி என்னாயிற்று? யோசித்துப் பாருங்கள்... சமஅளவிலாவது உள்ளதா? இல்லை அதற்கான முயற்சிகள் ஏதாவது எடுக்கப்பட்டதா? இவற்றால் நமதூரில் ஏற்படுகின்ற மனரீதியிலான மாறுதல்களை இன்று நம் கண்முன்னே கண்டு கொண்டிருக்கின்றோம். எனவே ஆண்பிள்ளைகளின் கல்லூரி கல்விக்கான முயற்சியை முன்னெடுத்து செல்வது இன்று நமதூருக்கு முதல் அவசியம்.

இரண்டாவது... இளைஞர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமான இடைவெளி களைதல்

நமதூர் (20-30 வரையிலான) இளைஞர்களை அவர்களுடைய சமூக பொறுப்புகள் குறித்து நட்பு ரீதியில் வழிகாட்டத் தவறிய ஊர் பெரியவர்கள். இதனை சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளிலும், ஊர் நிர்வாக தேர்தலுக்கான ஏற்பாட்டுக் கூட்டங்களிலும் இளைஞர்களின் குறைந்த வருகை உணர்த்தியது. காரணம்... அவர்களுடைய கருத்துக்களை கேட்க பெரியவர்களின் காதுகளுக்கு பற்றாக்குறை தான்.

இளைஞர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்குமான இடைவெளியை குறைத்து வருங்காலத்தில் நமதூரை ஆளப்போகின்ற அவர்களுடைய கருத்துக்களையும், சிந்தனை மாறுதல்களையும் அறிய... இளைஞர் அணியை ஏற்படுத்தி அரவணைத்துச் சென்று வழிகாட்டுவது இன்று நமதூருக்கு இரண்டாவது அவசியம்.

மூன்றாவது... கடமைகள், பொறுப்புகள் உணர்ந்த குடும்ப கட்டமைப்பு

கணவன் மனைவிக்குமான கடமைகள், பொறுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். ஊர் பழக்க வழக்கங்களுக்கும் மேலாக நமது இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் போதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் மூலமோ சகோதரர்கள் மூலமோ அதனை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் உணர்த்தப்பட வேண்டும். அதற்காக நமது ஊர் நிர்வாக அமைப்பு முதலில் சிறு சிறு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக கல்யாணமான ஆண்-பெண் நீங்கள் கூறுங்கள்... உங்களது திருமணத்தின் போது நீங்கள் உறுதிமொழியளித்து கையெழுத்திட்ட திருமண ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்து பார்க்க உங்களிடம் யாரும் சொன்னார்களா? அதற்கான போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதா? அதற்கான முக்கியத்துவம் நம்மில் உணரப்பட்டதா?


எனது வேண்டுகோள் என்னவெனில், திருமணத்திற்கு முன்னர் இருவீட்டார்களின் சார்பில் கோரப்படும் ஊர் உத்தரவுடன், இஸ்லாம் போதிக்கும் மணவாழ்க்கைகான கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த உறுதிமொழி பத்திரம் போதிய அவகாசத்தில் கொடுக்கப்பட்டு, படித்து பார்த்து பின்னர் மணமகன் மற்றும் மணமகளின் முழு சம்மதத்துடன் உறுதிமொழி கையெழுத்து பெறப்பட்ட பின்னரே திருமணத்திற்கான உத்தரவை ஊர் நிர்வாகம் வழங்க வேண்டும். அதற்கான அவசியம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

இம்மூன்று கோரிக்கைகளும் சமூகம் குறித்து கவலைப்படும் வெளிநாடு வாழ் நமதூர் உள்ளங்களின் ஏக்கங்களாக உங்கள் KEO அமைப்பின் கூட்டுப் பரிந்துரையுடன் பல கை ஓசையாக ஒலிக்க விரும்புகிறேன். அனைத்து நல் முயற்சிகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்...

மறுமொழிகள் Homepage >>> GuestBook வாயிலாக வரவேற்கப்படுகின்றன. Admin பார்வைக்குப் பின் உங்களது கருத்துக்கள் பதியப்படும்.

சமுதாய நலனில் தங்களின் ,
செய்யது நாசர் M.A., PGDCA
Editor/www.koothanallur.co.in

No comments:

Blog Archive