::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, July 24, 2010

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக் கடன்

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 3 சதவீத வட்டியில் கல்வி கடன் வழங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆண்டுக்கு ரூ. 50,000 என ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.39,500 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.54,500 இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்கல்வி மற்றும் இதற்கு ஈடான சிறப்பு தொழில் மற்றும் பயிற்சி கல்விகள் பயில வேண்டும்.

இக்கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில கழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும். இக்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.

மேலும் வழிமுறைகள் மற்றும் கடன் மனு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Sunday, July 18, 2010

இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

கூத்தாநல்லூர் ஜாமியா பெண்கள் தொடக்கப் பள்ளியில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

குவைத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, துபையில் உள்ள கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் அமைப்பு, சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் ஜமாத், மலேசியாவில் உள்ள மலேசியன் கூத்தாநல்லூர் ஜமாத் மற்றும் சென்னை பில்ரோத் மருத்துவமனை இணைந்து இந்த மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

முகாமுக்கு கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிகாபுதீன் தலைமை வகித்தார். பில்ரோத் மருத்துவமனையின் முதன்மை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். தியாகராஜமூர்த்தி தலைமையில் 5 மருத்துவர்கள் மற்றும் 30 மருத்துவப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த முகாம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. இந்த முகாமின் மூலம் நமதூரைச் சார்ந்த 550க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர். முகாமின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முகாம் நிறைவு கூட்டம் நடைபெற்றது. முகாமை கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் ஒருங்கிணைத்து நடத்தியது.

முகாம் புகைப்படங்கள்:



Sunday, July 4, 2010

நாளை 'பாரத் பந்த்'

பெட்ரோல், சமையல் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கள்கிழமை) பாஜக, இடதுசாரி கட்சிகள் தேசிய அளவி்ல் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழகத்தில் அதிமுக கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

போராட்டத்தை சமாளிக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அரசு அறிவித்துள்ளது. ரயில்களும் வழக்கம் போல் ஓடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பால், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், வேன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாவிட்டாலும் அலுவலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அதே போல அசம்பாவித சம்பவங்களுக்கு அஞ்சி குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு பெரும்பாலான பெற்றோர் அனுப்புவதும் சந்தேகமே.

Blog Archive